Thursday, November 13, 2014

நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் குட மிளகாய்

சைனீஸ் உணவுகளில் ருசிக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் இந்த காய்கறி வகைக்கு இப்போது இந்தியாவிலும் வரவேற்பு மிக அதிகம். இப்போது இந்திய பாரம்பரிய உணவுகளிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கலந்து காணப்படுகிறது. பொதுவாகவே உணவு என்றாலே உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.



காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு காரமற்றது குடைமிளகாய் என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. குடை மிளகாயின் பூர்வீகம் அமெரிக்க நாடுகள். இப்போது இந்தியாவில் அமோகமாக விளைச்சல் செய்யப்படுகிறது.

இதற்கு ஒரு பொதுப் பெயர் இல்லை. நாட்டிற்கு நாடு இதன் பெயர் மாறுபடுகிறது. இங்கிலாந்தில் ‘சில்லி பெப்பர்’ என்றும், அமெரிக்கா மற்றும் கனடாவில் ‘பெல் பெப்பர்’ என்றும், ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் ‘காப்சிகம்’ என்றும் அழைக்கிறார்கள். சுவீட் பெப்பர் என்றும் அழைப்பதுண்டு.

இதில் இருக்கும் காரத்தன்மைக்கு காரணம், ‘காப்ஸேயில்’ என்ற ரசாயனம். காரத்தன்மையின் பத்து சதவீதம் குடை மிளகாயின் விதையிலும், தோலின் வெளிப்பகுதியிலும் அடங்கியிருக்கிறது. மீதமுள்ள 90 சதவீத காரத்தன்மை உள்தோல், மத்திய பகுதி, விதையை உற்பத்தி செய்யும் திசுக்கள் அடங்கியுள்ள பகுதிகளில் உள்ளது.

குடை மிளகாயை உணவில் சேர்ப்பது பல விதங்களில் நமக்கு பலன் அளிக்கிறது. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக அது செயல்படுகிறது. கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும், அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.

பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவை களை கட்டுப்படுத்தும் சக்தியும் இதில்  இருக்கிறது.  ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

கொலஸ்ட்ராலையும், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் நீர்க்கட்டை குறைக்கும் தன்மையும் கொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைய உள்ளது.

இவை இரண்டும் சக்திமிக்க ஆன்டி ஆக்சிடென்ட்களாக செயல்பட்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குடைமிளகாய் மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அதிகமாக கிடைக்கிறது. பச்சையாகவோ, பாதி வெந்த நிலையிலோ இதை சாப்பிட்டால்தான் கூடுதல் சத்து உடலுக்கு கிடைக்கும்.

100 கிராம் குடை மிளகாயில் இருக்கும் சத்து:

புரோட்டின் - 0.99 கிராம்.
சக்தி - 31 கலோரி.
சோடியம் - 4 மி.கிராம்.
கொலஸ்ட்ரால் - இல்லை.
கொழுப்பு - 0.3 மி.கிராம்.
தாதுச் சத்து - 6.02 மி.கிராம்.
பொட்டாசியம் - 211 மி.கிராம்.
மெக்னீசியம் - 12 மி.கிராம்.
வைட்டமின் ஏ - 3131 ஐ.யூ.
வைட்டமின் சி - 127.7 மி.கிராம்.
கால்சியம் - 7 மி.கிராம்.
இரும்பு - 0.43 மி.கிராம்.

Monday, November 10, 2014

காய்கறிகளில் விஷம் - வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு

6350293180 பில்லியன் கிலோகிராம் அளவு கழிவு ஆண்டுதோறும் கடலில் கொட்டப்படுகிறது. கடல் மட்டுமின்றி ஆறு ஏரி குளங்கள் போன்ற அனைத்து நீர்நிலைகளிலும் சாக்கடை நீர், முறையே சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவு நீர், சாயப்பட்டறை, தோல்பதனிடும் ஆலைகளின் கழிவு, இரசாயன கழிவு, மிக கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்துபொருட்களின் கழிவு, தடைசெய்யப்பட்ட இரசாயனபூச்சி கொல்லி மருந்துகள் ஆகியன சென்றுக் கலக்கின்றன. இப்படி பட்ட கழிவுகள் கலந்த நீர்நிலைகள் மனிதர்கள் குடிக்கவோ விவசாயத்துக்கு பயன்படுத்தவோ தகுதியற்றவை. கழிவு நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துவதால் அதில் விளையும் பயிர் மற்றும் காய்கறிகள் பல பக்க விளைவுகள் உண்டாக்குகின்றன என அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



முறையற்ற இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் அதிக அளவு மக்கள் புற்றுநோய் மற்றும் மரபணு குறைபாடு போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் .

காசர்கோடு மற்றும் தக்க்ஷின் கனடா பகுதியில் தொடர்ந்து 20 ஆண்டுகள் வான் வழியாக தெளிக்கப்பட்ட எண்டோ சல்பானின் கொடூர விளைவுகளை அறிந்திருப்பீர்கள். பிறவி குறைபாடுகள் மரபணு குறைபாடுகள், புற்றுநோய், கருப்பை சம்பந்தமான நோய்கள், சரும நோய்கள் என மனதாலும் உடலாலும் அங்கு பிறக்கும் பிள்ளைகளும் அவதிப்பட்டதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல பல குழந்தைகளை உருக்குலைத்த பின் கேரளா 2005 ஆம் ஆண்டும் கர்நாடகா 2011 ஆம் ஆண்டும் என்டோசல்பான் பயன்பாட்டை தடை செய்தன!! ஆனாலும் இன்னும் பல இடங்களில் தடைசெயப்பட்ட இரசாயன பூச்சி கொல்லி மருந்துகள் கள்ள விற்பனையில் இருக்கின்றன என்பதற்கு பீஹார் மதிய உணவில், மோநோக்ரோடோபாஸ் இனால் மரணங்கள் சாட்சி .

வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு
-------------------------------------------------

ஒவ்வொரு பொருளிலும் இந்த மருந்து இருக்குமா இல்லை அந்த பூச்சி கொல்லி இருக்குமோ என்று ஆராய்ச்சி செய்ய தனி மனிதனால் இயலாது . ஆகவேதான் வீட்டுத்தோட்டம் மாடித் தோட்டம் காலத்தின் கட்டாயம்.

கேரளாவில் அங்கக வேளாண்மை, இயற்கை ஆர்கானிக் உணவு பொருட்களை வீட்டில் வளர்க்க பயிற்சியும், காய்கறி தாவரங்களை கவனிக்கும் முறைகள் அதற்கான தேவையான விதை, செடி வளர்க்க நாற்று பைகள் ஆகியவற்றையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அளிக்கிறார்கள்.

கொச்சி அருகே முண்டம்வெளி பகுதியை சார்ந்த விவசாயத்துறை அதிகாரி ஜான் ஷெர்ரி மாடிதோட்டத்தில் ஐம்பது பைகளில் காய்கறி தோட்டமமைத்து வெற்றியும் கண்டுள்ளார். இசெடிகளுக்கு தேவையான இயற்கை உரத்தினையும் தானே வீட்டில் தயாரித்துள்ளார்.

எளிய முறையில் உரம் தயாரிப்பு

1. மாட்டு சாண குழம்பு உரக்கலவை

நிலக் கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, எலும்பு எரு, மாட்டு சாணம் ஆகிய அனைத்தையும் தலா ஒரு கிலோ தேவை. இவற்றை ஒரு பெரிய கலனில் இட்டு தண்ணீர் மற்றும் கோமியம் சேர்த்து கலந்து கலனின் வாய் பகுதியை நன்கு மூடி வைக்க வேண்டும் .இக்கலவை நொதிக்க நான்கைந்து நாட்கள் ஆகும்.

ஐந்து நாட்களுக்கு பின்னர் ஒரு கோப்பை கலவையுடன் பத்து கோப்பை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து நேரடியாக செடிகளின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும் .

2. பாக்டீரியா பூச்சி கொல்லி

சூடோமொனாஸ் எனும் பாக்டீரியம் பவுடர் வடிவில் கடைகளில் கிடைக்கும் . ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவு கலந்து செடிகளின் மேல் தெளிக்கலாம். இதை நான்கு நாற்று பைகளுக்கு பயன்படுத்தலாம். சூடோமோனஸ் கலந்து பயன்படுத்தினால் வளரும் செடிகளை பூச்சிகள் அண்டாது .

3. மீன் அமினோ அமிலம் உரம்

கடைகளில் கிடைக்கும் மீன் கழிவு மற்றும் வெல்லப்பாகு இரண்டையும் தலா ஒரு கிலோ சேர்த்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு டைட்டாக மூடி வைக்க வேண்டும். பதினைந்து நாட்கள் நொதித்தலுக்கு பின்னர். இக்கலவையை வடிகட்டி அதில் இருந்து இரண்டு மில்லி லிட்டர் அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் கலந்து உரமாக பயன்படுத்த வேண்டும். பூக்கும் தாவரங்களுக்கு இவ்வுரம் மிக சிறந்தது .

4. அசாடரக்டின் /Azadaractin...

இது வேம்பிலிருந்து பெறப்படும் சாறு .
இது ஒரு சிறந்த பூச்சி கொல்லி ..இரண்டு மில்லி லிட்டர் சாறை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியில் இலை மற்றும் வேர் பகுதியில் தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

5. இதெல்லாம் போக சில வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 

வளரும் செடிகளை அன்போடு பராமரிக்கவேண்டும். நாற்று பைகளை போதிய இடைவெளி விட்டு வைக்க வேண்டும், பைகளை செங்கலின் மீது வைக்கலாம். உரத்தை மாலை நேரங்களில் செடிகளுக்கு இட வேண்டும். .தினமும் காலைவேளையில் நீர்ப்பாய்ச்சி விட வேண்டும்

ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஷெரி தொடர்ந்து அதே நாற்று பைகளை பயன்படுத்தி வருகின்றார். இவரது வழிகாட்டுதலால் சூரநிகரையில் 300 தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவரது குடும்பத்தினர் அனைவருமே இவருக்கு இந்த மாடிதோட்ட பராமரிப்பில் மற்றும் ஆலோசனை வழங்கும் விஷயத்தில் உறுதுணையாக உள்ளார்கள். மேலதிக விவரங்களுக்கு அவரைத்தொடர்பு கொள்ள அணுகவும் - 9447185944

மூலம் : தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்

Friday, November 7, 2014

கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும் குளியல் பவுடர்

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது.



சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு - 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்

வெட்டி வேர் - 200 கிராம்

அகில் கட்டை - 200 கிராம்

சந்தனத் தூள் - 300 கிராம்

கார்போக அரிசி - 200 கிராம்

தும்மராஷ்டம் - 200 கிராம்

விலாமிச்சை - 200 கிராம்

கோரைக்கிழங்கு - 200 கிராம்

கோஷ்டம் - 200 கிராம்

ஏலரிசி - 200 கிராம்

பாசிப்பயறு - 500 கிராம்

இவைகளை காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குலைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் நறுமணம் வீசுவதுடன் உடல் பொலிவுடன் இருக்கும் .

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.

இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.