இளநரை பிரச்சனைக்கு டை அடிக்க தயங்குகிறீர்களா ? இனி தயக்கம் வேண்டாம், இயற்கை முறையில் மிக எளிமையாக இளநரையை கருமையாக மாற்றலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
இன்றைய இயந்திர உலகில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.
இன்றைய உணவு முறை நாவின் சுவையை மட்டுமே முக்கியமாக கருதி தயாரிக்கப்படுகிறது. அதை தான் நாமும் விரும்பி சாப்பிடுகிறோம். துரித உணவு என்ற பெயரிலும் எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றையும் உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது. இதனால் உருவாகும் வாயு, பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது. இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும்.
மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.
இளநரை போக்க மூலிகை எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்
இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.
பெரிய நெல்லிக்காய் கொஞ்சம், எலுமிச்சை இலைகள் கொஞ்சம் எடுத்துக் கொண்டு இரண்டையும் பசும்பால் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். தலை முடியை நன்கு பிரித்து விட்டுக் கொண்டு இந்த கலவையை நன்றாக பூசவும். ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவேண்டும்.
சில நாட்களில் இளநரை மாறி கருமையாக முடி ஜொலிக்கும். மேலும் இது உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும்.
No comments:
Post a Comment